காலிறுதிக்கு முந்தைய சுற்றுப்போட்டியில் காயமடைந்த முகத்தில் 13 தையல்கள் போடப்பட்டிருந்தாதல் காலிறுதிப்போட்டியில் தன்னை பங்கேற்க வேண்டாம் என்று தன்னுடைய மனைவி சொன்னதாக இந்திய குத்துச்சண்டை வீரர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் நேற்று நடைபெற்ற ஆடவர் குத்துச்சண்டை 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் 0-5 என்ற புள்ளிகளில், உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிரிடம் தோல்வியை தழுவி போட்டியில் இருந்து வெளியேறினார். இந்தப் போட்டிக்கு முந்தைய ஆட்டத்தில் வென்றபோதும் அவரின் முகத்தில் காயம் ஏற்பட்ட இடங்களில் 13 தையல்கள் போடப்பட்டு இருந்தது.
ஆனாலும் மருத்தவரின் அனுமதியைப் பெற்று காயத்துடனேயே காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரரை எதிர்கொண்டார் சதீஷ் குமார். காலிறுதியில் சதீஷ் குமார் தோல்வியடைந்தாலும் அவர் காயத்துடன் விளையாடியதும், அவர் சிகிச்சைக்காக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சதீஷ் குமார் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து பேசிய சதீஷ் குமார் "காயம் எப்படிபட்டதாக இருந்தாலும் நிச்சயம் காலிறுதியில் சண்டையிட வேண்டும் என்றே விரும்பினேன். வெற்றியோ தோல்வியோ போட்டியில் பங்கேற்றாக வேண்டும். ஒருவேளை பங்கேற்காமல் இருந்திருந்தால். அந்தக் குற்ற உணர்வு என் வாழ்நாள் முழுவதும் இருந்திருக்கும். என் மனைவியும் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்றார் ஆனால் பின்பு அவர் என் உணர்வை புரிந்துக்கொண்டார்" என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments