இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலேயே விராட் கோலி மிகப்பெரிய சதத்தை பதிவு செய்வார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. மேலும் இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி இதுவரை விளையாடியுள்ள 5 இன்னிங்ஸில் மொத்தம் 124 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்தத் தொடரில் கோலியின் பேட்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
இது குறித்து பேசியுள்ள பிராட் ஹாக் "என்னுடைய கணிப்பின்படி இந்தத் தொடரிலேயே விராட் கோலி சதமடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. ஏனென்றால் லீட்ஸ் போட்டியில் அவருடைய பேட்டிங்கை கவனித்தேன். அது அவருக்கு கைகொடுத்துள்ளது. அதனால்தான் அவரால் நிலைத்து நின்று விளையாட முடிந்தது. அதனால் இந்த டெஸ்ட் தொடரிலேயே மிகப்பெரிய சதத்தை கோலி அடிப்பார். அதற்காக அவர் காத்திருக்கிறார்" என்றார்.
மேலும் பேசிய அவர் “கோலி மிகச் சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. அவரை கண்டு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் பயப்படுகிறார்கள். அதே சமயத்தில் எதிரணியினரும் பாராட்டும் வகையிலும் செயல்படுவார். இங்கு தோல்வி வரும்போதுதான் அவரை நோக்கி கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. இங்கிலாந்து நிச்சயம் இந்தியாவை கண்டு மிரள்கிறது. அதற்கு காரணம் விராட் கோலி" என்றார் பிராட் ஹாக்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments