Advertisement

‘3 போட்டிகளில் 116.3 ஓவர்கள்’.. ஓவல் டெஸ்ட்டில் ஆண்டர்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதியன்று ஓவல் மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

image

இங்கிலாந்து அணி அடுத்தடுத்து அதிக அளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதால் அவருக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. வேலை பளுவை மேற்கோள் காட்டி இதனை சூசகமாக தெரிவித்துள்ளார் இங்கிலாந்து பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட். 

39 வயதான ஆண்டர்சன் இந்தியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் 116.3 ஓவர்களை வீசியுள்ளார். மூன்று போட்டிகளில் விளையாடிய இந்திய பவுலர்கள் யாரும் இத்தனை ஓவர்களை வீசவில்லை. அதே நேரத்தில் இளம் இங்கிலாந்து பவுலர் ராபின்சன் 116.5 ஓவர்களை வீசியுள்ளார். அவரை விட இரண்டு பந்துகள் தான் ஆண்டர்சன் குறைவாக வீசியுள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஐந்து போட்டிகளிலும் தான் விளையாட விரும்புவதாக ஆண்டர்சன் முன்னதாக சொல்லி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

image

ஓவல் போட்டியில் அவர் விளையாடாத பட்சத்தில் விராட் கோலிக்கும், அவருக்கும் இடையே நடக்கும் அனல் பறக்கும் ஆட்ட மோதலை ரசிகர்கள் மிஸ் செய்வார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் அவர் 630 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக 131 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். விராட் கோலியை 7 முறை வீழ்த்தியுள்ளார். 

இதையும் படிக்கலாம் : பாராலிம்பிக் : உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments