
தமக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையில் எந்த பிரச்னையும் இல்லை எனவும் 2 ஆண்டுகளாக இதற்கு விளக்கமளித்து ஓய்ந்து விட்டேன் எனவும் கூறியுள்ளார் விராட் கோலி.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்கிறார். ஆனால், ஒருநாள் தொடருக்கு கேப்டனாக கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
இதனிடையே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தவிர, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் விராட் கோலி அதிருப்தியுடன் இருப்பதாகவும் செய்தி கசிந்தது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தாம் விளையாட உள்ளதாக விராட் கோலி தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோலி, ''பிசிசிஐ-யிடம் நான் எந்த ஓய்வும் கேட்கவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட தயாராக உள்ளேன். எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.2 ஆண்டுகளாக இதற்கு விளக்கமளித்து ஓய்ந்து விட்டேன். கேப்டனாக இல்லாமல் அணி வீரராக விளையாட தயார் என ஏற்கனவே தேர்வுக்குழுவிடம் கூறிவிட்டேன். வதந்திகள் யார் பரப்புகிறார்களோ அவர்களிடம் கேளுங்கள்.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்ட பின்பு, ஒருநாள் அணிக்கு நான் கேப்டன் இல்லை என தேர்வுக்குழு தலைவர் என்னிடம் கூறினார். என்னைப் பொறுத்தவரை எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கு நேர்மையாக இருப்பேன்'' என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments