
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு விராட் கோலியிடம் பிசிசிஐ வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 அன்றும் ஒருநாள் தொடர் ஜனவரி 19 அன்றும் தொடங்குகின்றன. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்கிறார். ஆனால், ஒருநாள் தொடருக்கு கேப்டனாக கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தொடைப் பகுதியில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகுவதாக பிசிசிஐ முறைப்படி அறிவித்தது.

இதனிடையே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தனது மகள் வாமிகாவின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக இந்தியாவுக்குத் திரும்பவுள்ளதால் ஒருநாள் தொடரிலிருந்து விலகும் முடிவை கோலி எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தவிர, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் விராட் கோலி அதிருப்தியுடன் இருப்பதாகவும் செய்தி கசிந்தது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு விராட் கோலியிடம் பிசிசிஐ வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலி பங்கேற்க உள்ளார். இக்கூட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுகிறாரா இல்லையா என்பதுகுறித்து கோலி தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments