சிறுமியின் பாலியல் வன்கொடுமைக்கு உதவியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாஷிர் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்குபவர் யாஷிர் ஷா. சுழற்பந்துவீச்சாளரான இவர் 46 டெஸ்ட் போட்டிகளில் 235 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். இந்நிலையில் யாஷிர் ஷா மீது இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாலிமார் காவல் நிலையத்தில் 14 வயதான சிறுமி ஒருவர், பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரில், ''யாஷிர் ஷாவின் நண்பர் பர்ஹான் என்பவர் என்னை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். நடந்த சம்பவத்தை அவர் வீடியோவாகவும் எடுத்து வைத்து என்னை மிரட்டத் தொடங்கினார்.
பர்ஹான் என்னை மிரட்டுவது குறித்து அவரின் நண்பரான கிரிக்கெட் வீரர் யாஷிர் ஷாவுக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னை ஏளனம் செய்து சிரித்தார். நடந்த சம்பவங்கள் குறித்து அதிகாரிகள் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது எனவும் அவருக்கு மிகவும் செல்வாக்கான நபர்களின் தொடர்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார். எனவே இது குறித்து புகார் தெரிவித்தால் உன்னுடைய ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என அவரும் என்னை மிரட்டினார்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் யாஷிர் ஷா மற்றும் அவரது நண்பர் பர்ஹான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷாலிமார் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, இப்புகாரின் பேரில் யாஷிர் ஷா மீது இஸ்லாமாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments