இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின், சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக கீப்பிங் செய்யும் விக்கெட் கீப்பர் யார் என்பதை தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு யூடியூப் மூலமாக பதில் அளித்துள்ளார் அவர்.
ஒரு சுழற்பந்து வீச்சு பவுலருக்கு திறமை வாய்ந்த விக்கெட் கீப்பர் ஸ்டம்புக்கு பின்னால் நிற்பது மிகவும் அவசியம். ஏனெனில் சுழற்பந்து வீச்சாளர் வீழ்த்தும் விக்கெட்டுகள் மற்றும் விட்டுக் கொடுக்கும் ரன்கள் என இரண்டுமே அந்த கீப்பரை பொறுத்துதான் அமையும்.
தோனி, தினேஷ் கார்த்திக், சாஹா, ரிஷப் பண்ட் என இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பர்களுடன் அஷ்வின் பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தோனி, சாஹா, தினேஷ் கார்த்திக் என்ற வரிசையில் அவர்களது பணியை வைத்து அவர்களை தனித்துவப்படுத்தி சொல்வது மிகவும் கடினம். தினேஷ் கார்த்திக் உடன் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். ஆனால் கடினமான டிஸ்மிஸலையும் எளிமையானதுபோல எளிதாக செய்பவர் தோனிதான்.
அதற்கு ஒரு உதாரணம் உள்ளது. சென்னையில் 2013-இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் எட்வார்ட் கோவனை ஸ்டம்பிங் செய்தது சிறப்பானது என சொல்லலாம். முதல் நாளான அன்றைய ஆட்டத்தில் பந்து பெரிதும் திரும்பவில்லை. ஆனால் பந்து பவுன்ஸாகி இருந்தது. அதை பிடித்து ஸ்டம்பை தோனி தகர்த்திருந்தார். ரன் அவுட், கேட்ச், ஸ்டம்பிங் என எதையும் அவர் மிஸ் செய்யமாட்டார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்பவர் அவர். சாஹாவும் அபாரமான விக்கெட் கீப்பர்தான்” என தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments