ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில், 'நான் அவுட் ஆனதற்கு புஜாராதான் காரணம்' என்று ரிஷப் பண்ட் தன்னிடம் புலம்பியதாக ரஹானே கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. அந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 407 ரன்களை இலக்காக கொண்டு ஆடியது. ரஹானே 4 ரன்களில் வீழ்ந்த பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். 118 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்து ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த புஜாரா 205 பந்துகள் எதிர்கொண்டு 12 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அந்த 3வது டெஸ்ட் போட்டி இரு தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிரா ஆனது.
இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து சமீபத்தில் நினைவுகூர்ந்த ரஹானே, ''பெவிலியனுக்கு திரும்பியதும் ரிஷப் பண்ட் ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் காணப்பட்டார். அப்போது ரிஷப் பண்ட் களத்தில் நடந்த விஷயத்தை என்னிடம் சொல்லி புலம்பினார். 'புஜாரா என்னிடம் 97 ரன்கள் வந்துவிட்டாய் நிதானமாக விளையாடு என்றார். புஜாரா கூறியது எனக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. நான் 97 ரன்கள் எடுத்திருப்பது கூட எனக்குத் தெரியாது. அப்படியே ஆடியிருந்தால் நான் சதமடித்திருப்பேன்' என்று ரிஷப் பண்ட் என்னிடம் புலம்பினார்'' என்று ரஹானே கூறினார்.
இதையும் படிக்கலாமே: மழை Vs இந்தியா Vs தென்னாப்பிரிக்கா.. இன்று வெற்றி யாருக்கு? #T20 #IndVsSA
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments