இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 211 ரன்களை குவித்தபோதிலும், பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியதால் தென் ஆப்பிரிக்கா கடைசி ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் முதல் இன்னிங்சில் 148 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது. புவனேஷ்வர் குமார் பொறுப்புணர்ந்து பந்துவீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். மற்ற பவுலர்கள் வள்ளல்களாக மாறி ரன்களை அள்ளித் தந்ததால் இந்தியா 2வது தோல்வியை சந்தித்துவிட்டது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது தென்னாப்பிரிக்கா.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “ இந்த அணியில் புவனேஷ்வர் குமாரைத் தவிர விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது முக்கிய பிரச்னை. எனவே, நீங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே, எதிரணியை அழுத்தத்திற்கு உள்ளாக்க முடியும். இரண்டு போட்டிகளிலும், புவனேஷ்வர் குமாரைத் தவிர வேறு யாராவது விக்கெட் எடுப்பதுபோல் தோன்றியதா? அவர் பந்தை நகர்த்திக் கொண்டிருந்தார். மொத்தத்தில் 211 ரன்களை இந்திய அணியால் பாதுகாக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்” என்று போட்டிக்குப் பிறகு கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments