நம் உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும் என்று இந்திய கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டியில் நடந்த மகளிருக்கான கோல்ஃப் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவில் 4-வது இடத்தை நிறைவு செய்த இந்திய வீராங்கனை அதிதி அசோக் தோல்வியை தழுவினார். இப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை நெல்லி கோர்டா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இந்தியாவின் அதிதி அசோக்குக்கு பதக்கம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோல்வியடைந்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து அதிதி அசோக் தன்னுடைய ட்விட்டர் பதிவில் "டோக்கியோவில் இருந்து இனிமையான மற்றும் கசப்பான நினைவுகளுடன் விடைபெறுகிறேன். நான் இதற்கு முன்பு இப்படி உடைந்த மனநிலையில் இருந்ததில்லை. கோல்பில் 4 ஆம் இடம் பிடித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் நான் என்னுடைய முழு அர்ப்பணிப்பை கொடுத்தேன். சில நேரங்களில் கோல்பில் இத்தகைய முடிவு அமையும். நமக்கு வேண்டியது எப்போதும் நமக்கு கிடைக்காது, ஆனால் நம் உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்" என பதிவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments