Advertisement

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டி - வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா

ஒலிம்பி ஆடவர் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்திற்கான மல்யுத்த போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெற்றி பெற்றார். 65 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற கஜகஸ்தான் நாட்டு வீரரை 8-0 என்ற கணக்கில் அபார வெற்றியை வசமாக்கியுள்ளார்.

முன்னதாக, அரையிறுதியில் தோல்வியுற்று இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்திருந்தார் பஜ்ரங் புனியா.

வறுமையுடன் மல்லுக்கட்டிய பஜ்ரங் புனியா: ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜாஜ்ஜர் மாவட்டத்தின் குடன் கிராமத்தை சேர்ந்தவர். வாழையடி வாழையாக அவரது குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் பாரம்பரிய விளையாட்டான மல்யுத்த விளையாட்டை விளையாடுவது வழக்கம்.

பஜ்ரங் புனியாவின் தந்தையும் மல்யுத்த வீரர். அதனால் தந்தை விளையாடுவதை பார்த்து அவருக்கும் அந்த விளையாட்டின் மீது ஆர்வம் வர ஏழு வயதில் மல்யுத்த பயிற்சிக்காக தனது கிராமத்தில் இயங்கி வந்த பாரம்பரிய மல்யுத்த பயிற்சி கூடத்தில் பயிற்சியை தொடங்கி உள்ளார் பஜ்ரங் புனியா. அதன் பிறகு நடந்தது அனைத்துமே வரலாறு.

வறுமை ஒரு பக்கம் அவரது கனவை அடைய விடாமல் தடுத்த சூழலிலும், அதனுடன் மல்லுக்கட்டி மல்யுத்த வீரராகி உள்ளார்.

"நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் கடின உழைப்பு எப்படி இருக்கும் என்பதை நன்றாக அறிந்தவன். எங்கள் கிராமத்தில் யாருமே தம்பில்ஸ், வெயிட் பிளேட் மாதிரியானவற்றை கொண்டு பயிற்சிகளை செய்வதில்லை. அங்கு பேன்சி ஜிம்கள் கூட இல்லை. இருந்தாலும் எங்கள் உடல் இரும்பு போல இருக்கும். அதற்கு காரணம் பாரம்பரிய பயிற்சிகள்.

சிறு வயதில் இருந்தே நான் பாரம்பரிய முறை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இன்று சகல வசதிகளும் கொண்ட பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளும்போதும் அதனை கைவிடவில்லை. இந்திய தண்ட் (தண்டால்) மற்றும் இந்திய பைத்தக் (Baithak) மாதிரியான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இந்த பாரம்பரிய பயிற்சி முறை நிச்சயம் எனக்கு ஒலிம்பிக் பதக்கம் பெற்றுக் கொடுக்கும்" என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் பஜ்ரங் புனியா.

தொடர்ந்து இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றது, காமன்வெல்த்தில் கிடைத்த தங்கம் மாதிரியான அனுபவங்களின் மூலம் சவால் மிக்க சக போட்டியாளர்களை டோக்கியோவில் அவர் சமாளிப்பார் என நம்பினோம். அந்த நம்பிக்கையை இப்போது நிஜமாக்கிய பஜ்ரங் புனியா சொன்னதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments