
அபுதாபியில் இன்று நடைபெற்ற ஐபிஎல் டி20 லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
அபுதாபியில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து டெல்லி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், பார்திவ் படேல் ஆகியோர் களமிறங்கி விரைவாக ஆட்டமிழந்தாலும் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட் மற்றும் ஹெட்மெயர் ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 154 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் முஸ்தபிஸூர் ரஹ்மான், சேட்டன் சக்காரியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் டெவாட்டியா, ஷம்சி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த டேவிட் மில்லரும் 7 ரன்களில் அவுட்டானார். இதனால் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே களத்தில் நிற்க பின் வந்த லோம்ரோர் மற்றும் ரியான் பராக் ஆகியோரும் விரைவில் அவுட்டானார்கள்.

ஆனால் கேப்டன் சாம்சனுடன் ஜோடி சேர்ந்த ராகுல் டெவாட்டியா ஸ்டிர்க்குகளை அற்புதமாக ரொடேட் செய்தார். இதனால் சாம்சனுக்கு அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பவுண்டரிகளாக மாற்றினார். பின்பு அரை சதமடித்த அவர் எப்படியாவது ராஜஸ்தானை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என போராடிக்கொண்டிருந்த நேரத்தில் ராகுல் டெவாட்டியா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்பு பந்துக்கும் ரன்னுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்தது.
சஞ்சு சாம்சன் மட்டுமே இறுதி வரை ஆட்டமிழக்காமல் போராடிக்கொண்டிருக்கு 20 ஓவர் முடிவில் ராஜஸ்தானால் 6 விக்கெட் இழப்புக்கு 12 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சஞ்சு சாம்சன் 53 பந்துகளில் 70 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments