விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பாராட்டி புகழந்துள்ளார். ‘நான் படிக்கின்ற பல்கலைக்கழகத்தில் தோனி தான் முதல் மாணவர்’ என சொல்லியுள்ளார் அவர்.
கடந்த 2018 வாக்கில் நடைபெற்ற இந்தியா - வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்களை சேர்த்திருந்தார். அது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. அதனால் சிறந்த ஃபினிஷர் என தோனியுடன் தினேஷ் கார்த்திக்கை சிலர் ஒப்பிட்டு பேசியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தினேஷ் கார்த்திக் இதனை சொல்லியுள்ளார்.
“எனது பயணமும், அவரது பயணமும் முற்றிலும் வேறு வேறு. நான் படிக்கின்ற பல்கலைக்கழகத்தில் தோனி தான் ஆகச்சிறந்த மாணவர். அதனால் இந்த ஒப்பீடுகள் நியாயமற்றது. நிறைய இளைஞர்களுக்கு உந்து சக்தி அவர். அன்றைய ஆட்டத்தில் அந்த கடைசி பந்து சிக்ஸர் இல்லாமல் பவுண்டரி போயிருந்தால் ஆட்டம் சூப்பர் ஓவர் வரை நகர்ந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. அது ஒரு நல்ல அனுபவம்” என அந்த சாதனைக்கு பிறகாக அப்போது பத்திரிக்கைகள் இடத்தில் தெரிவித்திருந்தார் தினேஷ் கார்த்திக்.
தற்போது ஐபிஎல் களத்தில் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் எதிரெதிர் அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். ஐபிஎல் அரங்கில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்களில் பட்டியலில் தினேஷ் கார்த்திக் 115 கேட்ச்களை பிடித்து முதலிடத்தில் உள்ளார். தோனி 114 கேட்ச்களை பிடித்துள்ளார். இது கொல்கத்தா, சென்னை அணிகளுக்கு இடையிலான மோதலுக்கு முன்னதான புள்ளி விவரம்.
இதையும் படிக்கலாம் : மகள்களை ஆரத்தழுவி அழகூட்டும் தமிழ் சினிமா - மகள்கள் தின ஸ்பெஷல்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments