Advertisement

பிளான் போட்டு கடைசி நிமிடத்தில் டிக்ளேர் செய்த ரகானே.. விக்கெட் வேட்டையை துவக்கிய அஸ்வின்

அஷ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் என மூன்று பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் கான்பூரில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 284 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் 345 ரன்களும், நியூசிலாந்து 296 ரன்களும் எடுத்தன. 51 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 51 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

image

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ரகானே ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். ஸ்ரேயஸ் 65, சாஹா 61*, அஸ்வின் 32, அக்சர் பட்டேல் 28* ரன்கள் எடுத்து இந்திய அணி வலுவான இலக்கை நிர்ணையிக்க உதவினர். மேற்கொண்டு சில ஓவர்களை மட்டுமே நான்காவது நாள் இறுதியில் விளையாட முடியும் என்ற நிலையில் அவர் டிக்ளேர் செய்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற முடியுமா? என்பதை சில புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்ப்போம்.

>இந்திய மண்ணில் இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு அணியும் நான்காவது இன்னிங்ஸில் 276 ரன்களுக்கு மேல் இலக்கை விரட்டியது (Chase) கிடையாது.

>நியூசிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக சேஸ் செய்துள்ள ரன்கள் 324 (1993-94 பாகிஸ்தான் அணிக்கு எதிராக), 317 (2008-09 வங்கதேசத்திற்கு எதிராக) மற்றும் 278 (1984-85 பாகிஸ்தான் அணிக்கு எதிராக) என உள்ளன.

image

>இந்த ஆண்டில் இதே போல 300 ரன்களுக்கு கீழான ரன்களை (271 ரன்கள்) இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் மைதான டெஸ்ட் போட்டியில் இலக்கு நிர்ணயித்து இருந்தது இந்தியா. அதில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

>இந்த ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு ஓவர்கள் விளையாடி உள்ள நியூசிலாந்து அணி 4 ரன்களை எடுத்து வில் யங்க்கின் விக்கெட்டை இழந்து உள்ளது. அஸ்வின் , இந்தியாவுக்கான முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். அந்த பந்தில் நியூசிலாந்து அணி தன்னுடைய ரிவ்யூவையும் இழந்துள்ளது. அதுவும் அந்த அணிக்கு ஒரு பின்னடைவுதான்.

image

>இந்த ஆட்டத்தில் கடைசி தினமான நாளைய ஆட்டத்தில் 90 ஓவர்களில் நியூசிலாந்து வெற்றி பெற 280 ரன்கள் எடுக்க வேண்டும். விக்கெட்டை இழக்காமல் ஓரளவு அடித்து விளையாடினால் நியூசிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. விக்கெட் வீழ்த்தியை பொருத்து நியூசிலாந்து அணி தன்னுடைய வியூகத்தை வகுத்துக் கொள்ளும்.

>இந்தியா 9 விக்கெட்டுகளை எடுத்தால் வெற்றி பெறும். இந்திய அணியில் அஸ்வின், அக்சர் பட்டேல், ஜடேஜா என மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். முதல் இன்னிங்சில் அக்சர் பட்டேல் அசத்தலாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்து இருந்தார். அதேபோல், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். ஆக மொத்தம் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனால், இந்திய அணி நாளையும் 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments