மும்பையில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து வெற்றிப்பெற 540 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேலின் மாயாஜால சுழலில் சிக்கி 109.5 ஓவர்களில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஜாஸ் படேல் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.
இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை துவங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்த நியூசிலாந்து, 28.1 ஓவர்களில் 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து நியூசிலாந்துக்கு பாலோ- ஆன் கொடுக்காமல் இந்திய அணி 2-வது இன்னிங்சை துவங்கியது. 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் எதுவும் இழக்காமல் 69 ரன்கள் எடுத்தது.
மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்களான மயங்க் அகர்வால் 62 ரன்களிலும் புஜாரா 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 35 ரன்களும், சுப்மன் கில் 47 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய அக்ஸர் படேல் 26 பந்துகளில் 41 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்கமால் இருந்தார். இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளெர் செய்தது.
இதனையடுத்து நியூசிலாந்து வெற்றிப்பெற 540 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments