மும்பை அணியின் தொடர் தோல்வி, ரோகித் ஷர்மாவின் மோசமான ஃபார்ம்... இந்தப்பட்டியலில் ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ள மற்றொரு விவகாரம் விராட் கோலியின் ஆட்டம்.
'ஃபுட் ஒர்க்' எனப்படும் பாத அசைவுகளை நேர்த்தியாக கையாண்டு, எதிர்வரும் எத்தகைய பந்துகளையும் நேர்த்தியாக பவுண்டரிக்கு விரட்டியும், சிக்சருக்கு தூக்கியடிக்கும் விராட் கோலியின் ஆட்டம் ஒருகாலத்தில் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஸ்டீவ் வாக், விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட மாபெரும் வீரர்களால் போற்றி புகழப்பட்ட விராட் கோலியின் ஆட்டம் இன்று விமர்சனப் பொருளாகி உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் மட்டையில் சூனியம் குடிக்கொண்டு விட்டது என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு அவரது மட்டைவீச்சு மந்தமாகி விட்டது. வழக்கமான அவரது ஸ்டைலுடன் பேட்டிங் க்ரீசுக்கு வருவதும், வந்த வேகத்திலேயே விக்கெட்டை பறிகொடுப்பதும், எதிர்முனையில் நிற்கும் துணை மட்டையாளரிடம் விரக்திப் பார்வையை சில நொடிகள் கொட்டி விட்டு பெவிலியினுக்கு நடையைக் கட்டுவதும் விராட் கோலிக்கு தற்போது வாடிக்கையாகிவிட்டது.
நடப்புத் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், வெறும் 119 ரன்களையே சேர்த்திருக்கிறார். சராசரியோ 17 ரன்கள் என்ற நிலையில் மிக மோசமாக உள்ளது. இதில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் ஆறுதலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தப் போட்டியில் 36 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். மற்ற 6 போட்டிகளிலும் சேர்த்து அவர் எடுத்த ரன்கள் வெறும் 71. லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும், அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் எதிர்கொண்ட முதல் பந்தே அவரது விக்கெட்டுக்கு எமனாக மாறியது.
அடுத்தடுத்த போட்டிகளில் விராட் கோலி இப்படி கோல்டன் டக் அவுட் ஆவது சர்வதேச கிரிக்கெட் களம் கண்டிராதது. என்னவானது கோலிக்கு என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுகிறது. அவரை களமிறக்க வேண்டுமா என்ற வினாவும் உதிக்கிறது. ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கோலி, தமது திறனை மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையை விடாது பற்றிக் கொண்டிருக்கின்றனர் கோலியின் ரசிகர்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments