ஆர்சிபி அணியின் நட்சத்திர பந்துவீச்சாளார் ஹர்ஷல் படேல் சமீபத்தில் இறந்த சகோதரியின் நினைவாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலின் மூத்த சகோதரி அர்ச்சிதா படேல் ஏப்ரல் 9 அன்று காலமானார். இச்சம்பவம் குறித்து அறிந்த பிறகு, அவர் இரண்டு நாட்கள் ஆர்சிபி அணியின் பயோ பப்புலை (Bio bubble) விட்டுவிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வீட்டிற்கு சென்றார். ஏப்ரல் 12 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான போட்டியில் ஹர்ஷல் படேல் விளையாடவில்லை.
பின்னர் அவர் ஏப்ரல் 16 அன்று டெல்லி கேப்பிடல்ஸை பெங்களூர் தோற்கடித்த போது ஆடும் லெவனுக்கு திரும்பினார். உணர்ச்சிவசப்பட்ட ஹர்ஷல் படேல் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மறைந்த சகோதரிக்கு இதயப்பூர்வமான குறிப்பு ஒன்றை எழுதினார். ஹர்ஷல் படேல் தன் சகோதரியை இழந்ததில் உள்ள வேதனையை வெளிப்படுத்தினார்.
"அக்கா! நீங்கள் என் வாழ்வில் மிகவும் கனிவான மற்றும் மகிழ்ச்சியான நபர்களில் ஒருவராக இருந்தீர்கள். உங்கள் கடைசி மூச்சு வரை உங்கள் முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் வாழ்க்கையில் நம்பமுடியாத சிரமங்களை எதிர்கொண்டீர்கள். நான் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு மருத்துவமனையில் உங்களுடன் இருந்தபோது நீங்கள் என் விளையாட்டில் கவனம் செலுத்த சொன்னீர்கள். உங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொன்னீர்கள் . அந்த வார்த்தைகள்தான் நான் நேற்றிரவு திரும்பி வந்து களமிறங்குவதற்கு ஒரே காரணம்.
View this post on Instagram
"உன்னை நினைவுகூறவும், பெருமைப்படுத்தவும் இப்போது என்னால் முடிந்தது அவ்வளவுதான். என்னைப் பற்றி உன்னைப் பெருமைப்படுத்திய அனைத்தையும் நான் தொடர்ந்து செய்வேன். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், நல்ல நேரங்களிலும், கெட்ட நேரங்களிலும் நான் உன்னை மிஸ் செய்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். இனி அமைதியாக ஓய்வெடுங்கள் அக்கா” என்று பதிவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments