இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை சேர்த்தது.
தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் இன்று இரவு டெல்லியில் தொடங்கிய முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணியும், டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது. இதனையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்ய களம் கண்டது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடினர். அதிரடியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட ருதுராஜ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இஷானுடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார். தென் ஆப்பிரிக்கா சுழற்பந்துவீச்சாளர் ஷம்சியின் ஓவரில் சிக்ஸர்களை விளாசினார். மறுபுறம் நிதானமாகவவும், அதிரடியாகவும் விளையாடிய இஷான் கிஷன் அரை சதம் விளாசி, தொடர்ந்து ஜெட் வேகத்தில் ரன்களை குவிக்க தொடங்கினர். இடையில் ஸ்ரேயாஸ் ஐயரை அவுட்டாக்கும் இரு வாய்ப்புகளை தென் ஆப்பிரிக்கா வீரர்கள் நழுவவிட்டனர்.
தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவர் தன்னுடைய இன்னிங்ஸில் 11 பவுண்டரிகளையும், 3 சிக்ஸர்களை விளாசினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஆனால் ஆடுகளத்தில் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இறுதியில் ரன்களை குவிக்க தொடங்கினர். அதிலும் ஹர்திக் பாண்டியா தன்னுடைய ஐபிஎல் ஆட்டத்திறனை சிறப்பாகவே இந்தப் போட்டியிலும் வெளிப்படுத்தினார். ஆனால் ரிஷப் பண்ட் 16 பந்துகளில் 29 ரன்களில் அவுட்டானார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை சேர்த்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்களை விளாசி அசத்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments