விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் இருந்தேன். ஆனால் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
நாட்டிங்கம்மில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய ராகுல் 84 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் விரைவாக ஆட்டமிழந்தாலும் 38 பந்துகளில் 26 ரன்களை சேர்த்தார். அதில் 6 பவுண்டரிகளும் அடங்கும்.
இது குறித்து பேசிய கே.எல்.ராகுல் "கடந்த சில தொடர்களில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா உள்ளிட்ட தொடர்களில் இந்தியா வெற்றிப்பெற்றதும் அணியில் ஒருவனாக இருந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அணியில் இருந்தும் விளையாட வாய்ப்பு அமையாதது மிகவும் விரக்தியை ஏற்படுத்தியது. ஏனென்றால் எப்போதும் ஒரு வீரருக்கு மைதானத்தில் சவால்களை எதிர்கொள்ளவே பிடிக்கும். ஒரு வழியாக இப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது" என்றார்.
மேலும் பேசிய அவர் "கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவே நினைத்தேன். என்னால் முடிந்த அளவுக்கு ரன்களையும் சேர்த்துள்ளேன். அது அணிக்கு உதவியாகவும் இருந்தது" என்றார். பும்ரா குறித்து பேசிய ராகுல் "ஒவ்வொரு போட்டியிலும் தன்னை மெருகேற்றி வருபவர் பும்ரா. டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான நாள்களில் இருந்து அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். பும்ரா அணியின் "மேட்ச் வின்னர்". அவர் இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசியது அனைவருக்கும் மகிழ்ச்சி" என்றார் அவர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments