
ஒரு வினாடியில் 13 குத்துக்களை பறக்கவிட்டு உலக சாதனை படைத்த சென்னையைச் சேர்ந்த மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட் வீரர், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஸ்பான்சர்களையும், அரசின் உதவிகளையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
சென்னை வடபழனி என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட் - குத்துச்சண்டை வீரர் பாலி சதீஷ், கூலி வேலை செய்து தனது வாழ்க்கைத் தொடங்கியவர். கலப்பு தற்காப்பு கலையில் பயிற்சி மேற்கொண்டு வரும் இவர் குத்துச்சண்டை, மல்யுத்தம், கிக் பாக்சிங், ஜூடோ, மோய்தாய் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சாதனை படைத்தவர். அதிவேகமாக ஒரு நொடியில் பதிமூன்று குத்துக்களை குத்தி புதிய உலக சாதனையை படைத்துள்ளார் பாலி சதீஷ்.

இவரது சாதனையை பாராட்டும் விதமாக சோழன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனம், பாலி சதீஷ்'க்கு கடந்த வாரம் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கியது. வரும் அக்டோபரில் எகிப்தில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் கிக் பாக்சிங் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள இவர் தேர்வாகியுள்ளார். அடுத்து உலக அளவிலான போட்டியிலும், அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச UFC போட்டியிலும் பங்கேற்க உள்ளார் சதீஷ்.
மகனின் கடும் உழைப்பை கண்டுவரும் தாய் மல்லிகா, தனது மகனின் வெற்றிக்காக 21 ஆண்டுகள் காத்திருப்பதாக கூறுகிறார். வெற்றி பெற்ற பிறகு பாராட்டுகள், வெகுமதிகளை கொடுப்பதை விட, ஏழ்மையில் உள்ள வீரர்களுக்கான அங்கீகாரமும் இருந்தால், சதீஷ் போன்ற வீரர்கள் மேலும் பல சாதனைகளை படைப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments