இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை ஓவலில் நடைபெற இருக்கும் 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்தது. பின்பு லார்ட்ஸில் இந்தியாவும், லீட்ஸில் இங்கிலாந்தும் வெற்றிப்பெற்று சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த டெஸ்ட்டில் தோற்றதால் இந்தப் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடாத துணை கேப்டன் ரஹானேவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்குரும், ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வினும் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. எனினும் இந்திய அணி ஆடும் லெவன் குறித்த முடிவுகள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு முடிவு செய்யப்படும் என இந்திய அணியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இதுவரை 13 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஓவல் மைதானத்தில் விளையாடி உள்ளது. அதில் இங்கிலாந்து 5 வெற்றியும், இந்தியா 1 வெற்றியும் பதிவு செய்துள்ளன. ஏழு போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இந்தியா கடைசியாக இந்த மைதானத்தில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணிதான் வெற்றி பெற்றுள்ளது. அதில் இரண்டு போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments