ரஹானே மீது நம்பிக்கை குறைந்துவிட்டதால் 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நாளை தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 1 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நாளை தொடங்க இருக்கும் போட்டியில் வெற்றிப்பெற்று முன்னிலைப் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து Cricbuzz இணையதளத்துக்கு பேசிய ஜாகீர் கான் "புஜாராவுக்கு முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கடுமையான அழுத்தம் இருந்தது. ஆனால் கடந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்துவிட்டார். அது அவருக்கு ஒருவித நிம்மதியை கொடுத்திருக்கும். ஆனால் ரஹானேவால் அப்படி செய்ய முடியவில்லை. இந்தத் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதால் அணி குறித்து மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. அதனால் அடுத்தப் போட்டியில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும்" என்றார்.
மேலும் பேசிய அவர் "நீங்கள் அணியில் வெகுகாலம் விளையாடி வருவதால் உங்களது கடந்த கால சாதனைகளை மட்டுமே எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதே முக்கியம், ஒரு அணியில் மூத்த வீரர்களாக இருப்பதால் இளம் வீரர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. அதேவேளையில் அணியில் தொடர்ந்து இருக்க கூடிய வாய்ப்பையும் நீங்கள் தக்க வைத்துக்கொள்வீர்கள்" என்றார் ஜாகீர் கான்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments