இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் மழை பொழிவது வழக்கம். எதிரணி பேட்ஸ்மேன்களை தனது சுழற்பந்து வீச்சு மூலம் திக்குமுக்காட செய்வார். அதனால் அவர் விளையாடுகின்ற ஒவ்வொரு போட்டியும் மைல் கற்களாக அமைவதுண்டு.
அப்படி ஒரு போட்டியாக தான் அமைந்துள்ளது மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி. இந்தப் போட்டியில் இதுவரையில் அவர் வீழ்த்தியுள்ள 7 விக்கெட்டுகளின் மூலம் இந்திய அணிக்காக ஒரே காலண்டர் ஆண்டில் 50 மற்றும் அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
நடப்பு ஆண்டு உட்பட வெவ்வேறு ஆண்டுகளில் மொத்தம் நான்கு முறை என 50+ விக்கெட்டுகளை ஒரே காலண்டர் ஆண்டில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் அஸ்வின். இந்த சாதனையை கும்ப்ளே (3 முறை), ஹர்பஜன் (3 முறை) மற்றும் கபில்தேவ் (2 முறை) படைத்துள்ளனர்.
இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா பந்து வீச தொடங்கியது முதலே இந்த இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல், 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு ஏற்ற வகையில் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசிய அஸ்வினும், நியூசிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸின் 32-வது ஓவரின் ஐந்தாவது பந்தை அஸ்வின் வீச அதனை எதிர் கொண்டார் ஹென்றி நிக்கோல்ஸ். அவர் பந்தை மிஸ் செய்ய பந்து பேட்டை கடந்து ஆப்-ஸ்டம்பை உரசி சென்றது. இருந்தும் பெயில்ஸ் கீழே விழ தவறியதால் அஸ்வினால் அந்த விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் போனது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதமை அவுட் செய்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரை அதிகமுறை அவுட் செய்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதன் மூலம் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் உடன் இணைந்துள்ளார் அஸ்வின். இருவரும் லேதமை 8 முறை அவுட் செய்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments