Advertisement

'விராட் கோலி புத்துணர்ச்சியை இழந்துவிட்டார்' - ரவி சாஸ்திரி

''விராட் கோலி தொடர்ந்து விளையாடுவதால் புத்துணர்ச்சியை இழந்துவிட்டார். அவருக்கு சிறிது காலம் ஓய்வு தேவை'' என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 31வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆர்சிபி வீரர் அனுஜ் ராவத் 4 ரன்கள் எடுத்திருந்த போது ஷமிரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய விராட் கோலி முதல் பந்திலேயே சமிரா ஓவரில் கோல்டன் டக் ஆனார். இதனால் ஆர்சிபி 7 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தடுமாறியது. லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய கோலி டக் அவுட் ஆகி வெளியேறியதை தொடர்ந்து, விராட் கோலி சதமடிக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறும் 100-வது போட்டி என்றாகி உள்ளது.

image

ஒருபுறம் விராட் கோலியின் மோசமான ஃபார்ம்மிற்கு ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வந்தாலும் மறுபுறம் விராட் கோலிக்கு ஆதரவான மற்றும் உறுதுணையாக கருத்துக்களையும் அவரது ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ''விராட் கோலிக்கு சிறிது காலம் ஓய்வு தேவை. அது 2 மாதங்களாக  இருந்தாலும் சரி, ஒன்றரை மாதங்களாக இருந்தாலும் சரி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு பிறகு இருந்தாலும் சரி, அதற்கு முன்னதாகவும் சரி, கோலிக்கு ஓய்வு நிச்சயம் தேவை. அவ்வாறு ஓய்வு எடுத்து வந்தால்தான் அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நான் கருதுகிறேன். அவர் தொடர்ந்து விளையாடுவதால் புத்துணர்ச்சியை இழந்துவிட்டார். இந்த காலங்களில் பயோ-பபிள் சூழல் மிகுந்த மனச்சோர்வை உண்டாக்கக்கூடியது. கோலி இன்னும் 6-7 வருடங்கள் நல்ல கிரிக்கெட் வீரராக வலம் வரலாம்'' என்று கூறினார்.

ரவி சாஸ்திரியின் கருத்தை ஆமோதித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், ''விராட் கோலி விளையாட்டிலிருந்து சிறிதுகாலம் விலகியிருக்க வேண்டும். சமூக ஊடகங்களிலிருந்தும் கூட அவர் தள்ளியிருக்க வேண்டும். கோலி 'பிரேக்' எடுத்துவிட்டு மீண்டும் அணிக்கு திரும்புவதை அணி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்'' என்று கூறினார்.

இதையும் படிக்க: ஆர்சிபி அணிக்கு வெற்றியை தேடித் தந்த சென்னை அணி தக்கவைக்க தவறிய 2 வீரர்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments