இன்றைய ஆட்டம் நடைபெறும் கட்டாக்கில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதனிடையே இன்றைய ஆட்டம் நடைபெறும் கட்டாக்கில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாக்கில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், இருப்பினும், போட்டியை பாதிக்கக்கூடிய அளவுக்கு கனமழை இருக்காது என்றும் மாநில வானிலை ஆய்வு மையத்தின் புவனேஸ்வர் பிரிவு இயக்குனர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். மழை பெய்தாலும் நிலைமையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக ஒடிசா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
முகக்கவசம் அணியாத யாரும் மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கட்டாக காவல்துறை ஆணையர் எஸ் கே பிரியதர்ஷி தெரிவித்துள்ளார். போட்டிக்கான டிக்கெட்டுகளில் 'நோ மாஸ்க் நோ என்ட்ரி' என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளதாகவும், பார்வையாளர்கள் கத்திகள் உள்ளிட்ட பிற பொருட்களை கொண்டு வர வேண்டாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கட்டாக் மைதானம் சுழலுக்கு சாதகமான ஒரு பிட்ச் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு சராசரி ஸ்கோரே 136 ரன்கள்தான். இந்த பிட்சில் ஒரு ஓவரில் சராசரியாக 7 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: பாபர் அசாமின் செயலால் பாகிஸ்தானுக்கு 5 ரன்கள் பெனால்டி - மைதானத்தில் நடந்தது என்ன?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments