Advertisement

'தோனியை ஏன் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு தெரியுமா?'-ராபின் உத்தப்பா பகிர்ந்த சுவராஸ்யம்

''தோனி மிகவும் குறைவாகவே பேசுவார். ஆனால் அவர் பேசும்போதெல்லாம் அனைவரும் அவர் சொல்வதைக் கேட்போம்'' எனக் கூறியுள்ளார்  ராபின் உத்தப்பா.

ஐபிஎல் 2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, மகேந்திரசிங் தோனியை 'மஹி பாய்' என்று அழைப்பது கடினமாக இருந்ததாக நினைவு கூர்ந்துள்ளார் ராபின் உத்தப்பா. ரவிச்சந்திரன் அஷ்வினின் யூடியூப் சேனல் பேட்டிக்காக அவரிடம் பேசிய ராபின் உத்தப்பா, ''தோனியை இப்போது 'மஹி பாய்' என்று அழைப்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. இதுவரையில் அவரை மஹி, எம்எஸ் என்றுதான் அழைத்திருக்கிறேன்.

2008க்குப் பிறகு, நான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டப் பின், 12-13 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் விளையாடுகிறேன். இதுவொரு பெருமையான தருணம். அப்போது ஒருமுறை தோனியிடம் தயக்கத்துடனே கேட்டேன். 'நான் உங்களை எவ்வாறு அழைக்க வேண்டும் நண்பா? எல்லோரும் உங்களை 'மஹி பாய்' என்று அழைப்பதால் நானும் அப்படித்தான் கூப்பிட வேண்டுமா' என்று கேட்டேன். அதற்கு தோனி, 'அதெல்லாம் தேவையில்லை. என்னை எம்.எஸ். என்றோ மஹி என்றோ கூப்பிடலாம். அல்லது நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்' என்றார். அவ்வளவு எளிமையானவர் அவர். தோனியை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

image

தோனி மிகவும் குறைவாகவே பேசுவார். ஆனால் அவர் பேசும்போதெல்லாம் அனைவரும் அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்போம். சில நேரங்களில் காமெடியாகவும் பேசுவார். இந்திய அணியின் கேப்டனாக வருவதற்கு முன்பே தோனி தனித்துவமாக செயல்பட்டார்'' என்று உத்தப்பா கூறினார்.

இதையும் படிக்கலாம்: 'இத நான் எதிர்பார்க்கல' கம்மின்ஸ் அதிரடியில் மிரண்டுபோன ரோகித் சர்மா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments